ADDED : ஜூன் 27, 2024 06:41 AM
ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி விமான நிலைய இயக்குனருக்கு, 'இ- - மெயில்' மூலம், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஹூப்பள்ளி கோகுல் ரோட்டில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விமான நிலையத்தின் இயக்குனராக இருப்பவர் ரூபேஷ் குமார். நேற்று முன்தினம் மதியம் இவரது இ --மெயிலுக்கு, 'லாங் லிவ் பாலஸ்தீனம்' என்ற இ- - மெயிலில் இருந்து குறுந்தகவல் வந்தது.
அந்த குறுந்தகவலை ரூபேஷ் குமார் திறந்து பார்த்தபோது, 'நீங்கள் செய்த அனைத்து கெட்ட காரியங்களுக்கும் பதில் இல்லை என்று நினைக்க வேண்டாம். உங்களை தீயில் தள்ளிவிட்டு கொலை செய்வோம்' என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து, விமான நிலைய பொறுப்பாளர் பிரதாப் கவனத்திற்கு கொண்டு சென்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் சிக்கவில்லை.
கொலை மிரட்டல் குறித்து கோகுல் ரோடு போலீஸ் நிலையத்தில், ரூபேஷ் குமார் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.