நுாலக மேற்பார்வையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க முடிவு
நுாலக மேற்பார்வையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க முடிவு
ADDED : ஆக 13, 2024 08:45 PM

பெங்களூரு : ''அனைத்து நுாலக மேற்பார்வையாளர்களையும் குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் கொண்டுவர காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை, கர்நாடக பஞ்சாயத்து ராஜ் ஆணையரகம் இணைந்து நடத்திய தேசிய நுாலகர்கள் தினம், மேற்பார்வையாளர்கள் மாநில மாநாட்டை, நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது:
புத்தகங்கள், நல்ல நண்பன் போன்றது. நுாலகங்களுக்கு செல்வது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. கிராமங்களில் 6,599 புதிய கிராம நுாலகங்களை திறக்க அரசு முடிவு செய்து, அறிவித்துள்ளது. அனைத்து நுாலக மேற்பார்வையாளர்களையும் குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் கொண்டு வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே அறிவித்துள்ளார்.
* அறிவு வளர்ச்சி
பள்ளியில் படிக்கும் கல்வியால் மட்டும் அறிவு வளர்ச்சி சாத்தியமில்லை. பள்ளிகளுக்கு வெளியேயும் கற்பது அவசியம். அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுத்தறிவு இல்லாமல் இருந்த சமூகத்தினருக்கு, கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகளாகியும், 100 சதவீதம் கல்வி அறிவு பெற முடியவில்லை. இதை அடைய வேண்டிய திசையில் கடுமையாக உழைக்க வேண்டும்.
* அர்த்தமுள்ள பிறவி
ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், குழந்தைகளும் நுாலகங்களை பயன்படுத்தி அறிவை பெற வேண்டும். இது அம்பேத்கரின் கனவு. நாம் வளர்ந்தாலும், உலகளாவிய மக்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான், மனித பிறவி அர்த்தமுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.