ADDED : ஜூன் 07, 2024 07:23 AM

ஷிவமொகா: ''லோக்சபா தேர்தலில் தோல்வி அடைவேன் என்று, எனக்கு முன்பே தெரியும்,'' என்று, ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறி உள்ளார்.
ஷிவமொகாவில் நேற்று ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் பா.ஜ., - எம்.பி.,க்கள் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. இந்த தேர்தலில் 17 ஆக குறைந்து உள்ளது. இதுபற்றி பேசாமல், ஆளுங்கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் ஒன்பது இடத்தில் தான் வெற்றி பெற்றது என்று எடியூரப்பாவும், அவரது மகன் விஜயேந்திராவும் கூறுவது வெட்கக்கேடானது. ஷிவமொகா உட்பட சில தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி பெயரை பயன்படுத்தி, பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
தென்மாவட்ட வெற்றிக்கு ம.ஜ.த., உதவியது. எடியூரப்பாவுக்கு கட்சி எப்படி சென்றாலும் பரவாயில்லை. அவரது மகன்கள் நன்றாக இருக்க வேண்டும். ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடும் போதே, தோல்வி அடைவேன் என்று, எனக்கு முன்பே தெரியும். ஆனாலும் ஏதாவது மாற்றம் ஏற்படுத்தலாம் என்று போட்டியிட்டேன்.
தலித், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை புறக்கணித்ததே, கர்நாடக பா.ஜ., சறுக்கலுக்கு காரணம். பா.ஜ.,வுக்கு லிங்காயத் சமூகம் மட்டும் போதும் என்று, எடியூரப்பா கூறுகிறார். மாநில மக்கள் தொகையில் குரூபர் சமூகம், மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை, அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
கட்சி ஒரு குடும்பத்தின் கையில் இருக்க கூடாது. ஹிந்துத்வா சக்தியை பலவீனப்படுத்தும் வேலை, கர்நாடக பா.ஜ.,வில் நடக்கிறது. கட்சி முடிவுகளை தந்தை, மகன்கள் எடுக்கின்றனர். ரவியை எம்.எல்.சி., ஆக்கியது நல்ல முடிவு. அவரை மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கினால், மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.