ADDED : மே 09, 2024 05:22 AM

தார்வாட் : தார்வாட் ஐ.ஐ.டி.,யின் புதிய இயக்குனராக பேராசிரியர் மஹாதேவ பிரசன்னா நியமிக்கப்பட்டார்.
தார்வாடில், 2016ல் ஐ.ஐ.டி., துவங்கப்பட்டது. தற்போது, தண்ணீர் மற்றும் நில நிர்வகிப்பு மையத்தில் இயங்குகிறது. கர்நாடக அரசு சார்பில், ஐ.ஐ.டி., வளாகத்துக்கு 470 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 2022ல் ஐந்து ஸ்டார் கல்வி மையம் என்ற அங்கீகாரம் கிடைத்தது.
கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முதல்கட்ட நிரந்தர வளாகம் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தார்வாட் ஐ.ஐ.டி., கல்வி மையத்தின் இயக்குனராக பேராசிரியர் வெங்கப்பய்யா தேசாய் செயல்பட்டு வந்தார். இவர் ஓய்வு பெற்றதால், புதிய இயக்குனராக பேராசிரியர் மஹாதேவ பிரசன்னா நேற்று நியமிக்கப்பட்டார்.
இவர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவுகளில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். குவாஹட்டி ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் டீன் ஆக பணியாற்றிய அனுபவம் உண்டு.
மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், 2004ல் முனைவர் பட்டம் பெற்றவர். 2023ல் சிறந்த பேராசிரியருக்கான தேசிய விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.