ADDED : ஏப் 19, 2024 06:19 AM
ஜெ.பி.நகர்: பெங்களூரின் கோரகுண்டேபாளையாவில் வசித்தவர் சுரேஷ், 46. ஷாகம்பரி நகரில் வசித்தவர் அனுஷா, 25. சுரேஷுக்கு திருமணமாகி, பிள்ளைகள் இருந்தும் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர்.
அனுஷாவுக்கு கள்ளத்தொடர்பை தொடர்வதில் விருப்பம் இல்லை. சமீப நாட்களாக சுரேஷை விட்டு விலக ஆரம்பித்தார். அனுஷா தன்னை விட்டு விலகி செல்வதை, சுரேஷ் விரும்பவில்லை. தன்னுடன் இருக்க வேண்டும் என, பிடிவாதம் பிடித்தார்.
இது குறித்து பேச வேண்டும் எனக் கூறி ஜெ.பி.நகர் அருகில் உள்ள, சாரக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு, அனுஷாவை வரவழைத்தார். அவரது தாய் கீதா, 50 உடன் வந்திருந்தார். பேசும்போது, சுரேஷுக்கும், அனுஷாவுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த சுரேஷ் கத்தியால், அனுஷாவை குத்தினார்.
மகளை காப்பாற்ற கீதா முயற்சித்தார். அங்கிருந்த செங்கல்லை எடுத்து சுரேஷின் மண்டையில் அடித்தார். இதில், சுரேஷ் உயிரிழந்தார். கத்தியால் குத்தப்பட்ட அனுஷாவும் இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஜெ.பி.நகர் போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டனர். கீதாவை கைது செய்தனர்.

