ADDED : ஆக 18, 2024 11:27 PM

யாத்கிர் : யாத்கிர் டவுனில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பேக்கரி உட்பட ஒன்பது கடைகள் எரிந்து நாசமாகின.
யாத்கிர் அருகே சைதாப்பூர் டவுன் பாபு ஜெகஜீவன்ராம் சதுக்கத்தில், பேக்கரி உட்பட 15 கடைகள் வரிசையாக அமைந்து உள்ளன. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பேக்கரியில் இருந்து, புகை கிளம்பியது.
சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென வேகமாக பரவி, பக்கத்தில் இருந்த இரண்டு மொபைல் போன் கடைகள், மூன்று ஹோட்டல்கள், இரண்டு பிளம்பர் கடைகள், அழகு நிலையத்தில் பரவி எரிந்தது.
அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு, தீப்பிடித்த கடைகள் மீது ஊற்றப்பட்டது. ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில், அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். ஆனாலும் பேக்கரி உட்பட ஒன்பது கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சைதாப்பூர் டவுன் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் தீயணைப்பு நிலையம் அமைக்க, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சைதாப்பூரில் தீ விபத்து ஏற்பட்டால் 35 கி.மீ., துாரத்தில் உள்ள, யாத்கிரில் இருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.