ADDED : ஜூன் 03, 2024 04:54 AM
பெங்களூரு: கர்நாடகாவில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவுடன், முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கும்படி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில், அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு மதிய உணவு, வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் திறந்துள்ளன. மாணவ - மாணவியருக்கு முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்க வேண்டும். 2024 ஜூன் முதல் 2025 வரை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் முட்டை, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்க வேண்டும். ஒருவேளை செவ்வாய், வியாழன் விடுமுறை இருந்தால், மறுநாள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.