ஒரே கூட்டணியில் இருக்கிறோம் ஆனாலும் குமட்டல் தான் வருகிறது: சிவசேனா அமைச்சர் சர்ச்சை பேச்சு
ஒரே கூட்டணியில் இருக்கிறோம் ஆனாலும் குமட்டல் தான் வருகிறது: சிவசேனா அமைச்சர் சர்ச்சை பேச்சு
ADDED : ஆக 30, 2024 11:30 PM

மும்பை: “ஒரே கூட்டணியில் இருந்தாலும், மஹாராஷ்டிரா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் அருகில் அமர்ந்திருப்பது குமட்டலை வர வைக்கிறது,” என, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தனாஜி சாவந்த் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., - அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள 48 இடங்களில், 17 தொகுதிகளை மட்டுமே வென்றது, 'மஹாயுதி' என அழைக்கப்படும் இந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான கருத்துகளால், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே சமீபகாலமாக மோதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனாவைச் சேர்ந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “சட்டசபையில், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமர்ந்தாலும், வெளியே வந்த பின் குமட்டல் ஏற்படுகிறது. எங்களுக்கும், அவர்களுக்கும் கொள்கை ரீதியாக வேறுபாடு உள்ளது,” என்றார்.
இது தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் நேற்று கூறுகையில், “கட்சியின் மூத்த தலைவர்களுக்கு என் வேண்டுகோள். இதுபோன்ற பேச்சுக்கு செவிசாய்ப்பதைவிட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது என கருதுகிறேன். தேசியவாத காங்.,கை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
“இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், நாம் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். கூட்டணி தர்மத்துக்காகவே அமைதியாக இருக்கிறோம். அவரின் குமட்டலுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதான் சிகிச்சை செய்ய வேண்டும்,” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், 'மஹாயுக்திக்கு இனி தேசியவாத காங்கிரஸ் தேவையில்லை என்பதையே தானாஜி பேச்சு காட்டுகிறது. சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.