முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு பிரிவினைவாதிகள் மிரட்டல்
முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு பிரிவினைவாதிகள் மிரட்டல்
ADDED : மே 01, 2024 01:37 AM

புதுடில்லி:காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., ஜிதேந்தர் சிங் ஷன்டி, போலீசில் புகார் செய்து உள்ளார்.
டில்லி சஹ்தாரா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஜிதேந்தர் சிங் ஷன்டி,61. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், ஷஹீத் பகத்சிங் சேவா தளம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
புதுடில்லி விவேக் நகர் போலீசில், ஜிதேந்தர் சிங் கொடுத்துள்ள புகார்:
என் வாட்ஸாப் எண்ணுக்கு நேற்று முன் தினம் இரவு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் பஞ்சாபி மொழியில் பேசினார். என் மகன் பெயரைக் கேட்டார்.
மேலும், காலிஸ்தான் இயக்கத்துக்கு எதிராகப் பேசினால் என்னையும் என் மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
என் மகன் ஜோத் ஜீத் சிங், டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளராக பதவி வகிக்கிறார். அவர், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக தன் கருத்தை வெளிப்படையாகக் கூறி வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.