துங்கபத்ராவில் 15 டி.எம்.சி., தண்ணீர் போச்சு அணைகளை ஆய்வு செய்ய வல்லுனர் கமிட்டி
துங்கபத்ராவில் 15 டி.எம்.சி., தண்ணீர் போச்சு அணைகளை ஆய்வு செய்ய வல்லுனர் கமிட்டி
ADDED : ஆக 13, 2024 07:18 AM

பெங்களூரு: துங்கபத்ரா அணை ஷட்டர் உடைந்து, பெருமளவில் தண்ணீர் வெளியேறிய பின், கர்நாடக அரசு விழித்து கொண்டது. அனைத்து அணைகளின் திறனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக வல்லுனர் கமிட்டி அமைக்கப்படுகிறது.
கொப்பால் மாவட்டம், முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. இதன் 19வது மதகின் ஷட்டர், திடீரென உடைந்தது. இதனால் பெருமளவில் தண்ணீர் வெளியேறுகிறது. நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி, 13 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. இந்த அளவு, இரவில் 15 டி.எம்.சி.,யை தாண்டிவிடும்.
எதிர்க்கட்சிகள்
இந்த சம்பவம், மற்ற அணைகளின் திறன், பாதுகாப்பு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
அணைகளின் சூழ்நிலையை ஆய்வு செய்யும்படி, எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் வலியுறுத்துகின்றனர். சம்பவத்துக்கு பின், விழித்துக்கொண்ட அரசு, அனைத்து அணைகளின் திறனை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது பற்றி பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமார், நேற்று அளித்த பேட்டி:
துங்கபத்ரா அணை கதவு உடைந்து, தண்ணீர் வெளியேறி பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே அணைகளின் திறனை ஆய்வு செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்னும் இரண்டு நாட்களில் கமிட்டி அமைக்கப்படும். இக்கமிட்டி, மாநிலத்தின் அனைத்து அணைகளுக்கும் சென்று, ஆய்வு செய்யும்.
விரைவில் பழுது
துங்கபத்ரா அணைக்கு சென்றிருந்தேன். உடைந்த ஷட்டரை பழுது நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஒப்பந்ததாரர்களுடன் பேசியுள்ளேன். டிசைன்களை அனுப்பியுள்ளோம்.
நான்கைந்து நாட்களில் சரிசெய்யப்படும். அணையின் கீழ்ப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்களை காப்பாற்ற, ஏற்பாடு செய்துள்ளோம்.
துங்கபத்ரா அணையை முதல்வர் சித்தராமையா, இன்று பார்வையிடுகிறார். ஏற்கனவே தொழில்நுட்ப குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 70 ஆண்டுகளில் முதன் முறையாக இப்படி நடந்துள்ளது.
தற்போதைக்கு அணையில் உள்ள நீரை தக்கவைக்க முயற்சிக்கிறோம். 55 முதல் 60 டி.எம்.சி., நீரை தக்கவைப்போம். துங்கபத்ரா அணை, அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
இதை நிர்வகிக்க தனி கமிட்டி உள்ளது. நாங்கள் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமே. அணை எங்களிடம் உள்ளது; சாவி நிர்வாக கமிட்டியிடம் உள்ளது.
கே.ஆர்.எஸ்., அணைக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார். அவருக்கு என்ன தெரியும்? அவருக்கு அரசியல் மட்டுமே செய்ய தெரியும். இவ்வாறு அவர்கூறினார்.
காங்., அரசுக்கு அபசகுனம்
-கோவிந்த் கார்ஜோள்,எம்.பி., - பா.ஜ.,

