ADDED : செப் 12, 2024 11:39 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண், நேற்று முன்தினம் காலை, பசு மாடுகளுக்கு புல் அறுக்க தோட்டத்துக்கு சென்றார். அப்போது எலப்புள்ளி கொட்டில்பாறை பகுதியைச் சேர்ந்த சைமன், 31, என்பவர் பெண்ணை பின்தொடர்ந்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
தப்பிக்க முயன்ற பெண்ணை, புல் அறுக்க பயன்படுத்தும் கத்தியால் குத்தி விட்டு, சைமன் தலைமறைவானார். படுகாயம் அடைந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், அவரை மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பாலக்காடு புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சைமனை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சைமன் அவரது வீட்டின் அருகில், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சோர்வடைந்த நிலையில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சைமன் ஆபத்தில் இருந்து மீளவில்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.