ADDED : ஏப் 13, 2024 05:38 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலால், கர்நாடக அமைச்சர்கள் தீயாய் வேலை செய்யத் துவங்கி உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக, ஐந்து அமைச்சர்களின் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதைத் தவிர மொத்தமாக 28 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு, ஒவ்வொரு அமைச்சருக்கும் உள்ளது.
வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால், அவருக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பதவி இழக்க நேரிடும் என, காங்கிரஸ் மேலிடம் முன்கூட்டியே எச்சரித்து உள்ளது.
இதனால் வேட்பாளர்கள் வெற்றிக்காக, அமைச்சர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். கீழ்மட்ட தலைவர்களுடன் கூட நட்புறவு கடைப்பிடிக்கின்றனர்.
இதற்கிடையில் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும், சில அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியில் இருக்கும் மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் அமைச்சர்கள் உஷாராகி உள்ளனர். பதவியை காப்பாற்ற தேர்தல் களத்தில் தீயாக வேலை செய்துவருகின்றனர்.

