ADDED : ஆக 02, 2024 12:15 AM
பயிற்சி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை நேற்று முன் தினம் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
ஜூலை 27ல் பெய்த மழையில் மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, பயிற்சி மையங்களின் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் ராஜேந்தர் நகரை வெள்ளம் சூழ்ந்தது. முட்டியளவு தேங்கிய மழை வெள்ளத்தில் நின்றபடி பயிற்சி மாணவர்கள், அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
இரவு உணவிற்காக நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தோம். சில நிமிட மழையிலேயே இந்த பகுதி முழுவதும் வெள்ளம் நிரம்பிவிட்டது.
எங்கள் போராட்டத்தை ஒடுக்க அரசும் மாநகராட்சியும் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துகின்றன. ஆனால் வடிகால்களை சுத்தம் செய்ய கடந்த ஐந்து நாட்களாக எதுவும் செய்யவில்லை.
பயிற்சி மையங்களில் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த வாரம் ஏற்பட்ட சோக சம்பவத்திற்கு பிறகு, வடிகால்களை சுத்தம் செய்துவிட்டதாக மாநகராட்சி கூறியது. ஆனால் எதுவும் செய்யவில்லை என்பதை மழை உணர்த்திவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.