ADDED : ஏப் 03, 2024 11:32 PM

புதுடில்லி: ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி அமைச்சர் ஆதிஷி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. உடல்நலக் குறைவு இருந்த போதும், 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைத்து வந்தார்.
கைது செய்யப்பட்டதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால், 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளார். சிறையில் அடைத்து அவரது உடல்நிலையை, பா.ஜ., ஆபத்தில் தள்ளியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், நாடு மட்டுமல்ல, கடவுள் கூட, பா.ஜ.,வினரை மன்னிக்க மாட்டார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து, திஹார் சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஏப்., 1-ம் தேதி சிறைக்கு வந்ததில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும், அவரது உடல் எடையும், 65 கிலோவாக உள்ளது.
'இதில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

