வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'
UPDATED : ஜூலை 19, 2026 10:32 AM
ADDED : ஜூலை 18, 2026 08:35 AM

நமது நிருபர்
ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சற்று தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விக்ரம்-1 ராக்கெட் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியையே சாரும்
இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம்; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வாய்ப்பு வழங்கியதன் வாயிலாக இந்த ஏவுதல் சாத்தியம் ஆகி இருக்கிறது. இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்; ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ஏவுதலை நிகழ்த்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை பெற்ற ஸ்கை ரூட் நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பெருமை பிரதமர் மோடியை சாரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்காவிட்டால், நாம் இன்று இந்த நிகழ்வை கண்டிருக்க முடியாது. இன்று பிரதமர் மோடியின் முடிவு சரியானது என்று நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் வெறும் ஐந்து ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரத்திலும், விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையிலும் ஒரு மிகப்பெரிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் கணிசமான வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் அது மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டம் வெற்றி இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் தனியார் விண்வெளித்துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை உலக அளவில் சாதனையாக, விண்வெளி துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக அமையும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
விக்ரம்1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
