தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

31


UPDATED : ஜூலை 19, 2026 10:32 AM

ADDED : ஜூலை 18, 2026 08:35 AM

Follow on GoogleFavourite on Google

31

UPDATED : ஜூலை 19, 2026 10:32 AM ADDED : ஜூலை 18, 2026 08:35 AM


31
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இத்தகைய வியத்தகு முன்னேற்றம் தனியார் துறையால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பஸ்களை அரசே இயக்கி, அதில் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டும் கொடுமை நடக்கிறது.



ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.

இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சற்று தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விக்ரம்-1 ராக்கெட் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெயருக்கான காரணம்!

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கி வைத்த டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக விக்ரம்-1 என ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. ஸ்கைரூட்டின் விக்ரம்-1 வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்ததன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்பதை விவரிக்கிறது.



2030க்குள் 50 ராக்கெட்டுகள்!

தனியார் ராக்கெட் விக்ரம்- 1 திட்டமிட்ட புவி வட்டப்பாதைக்கு அனுப்பி அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இது குறித்து ஸ்கை ரூட் நிறுவனர் பரத் கூறியதாவது: இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுதல் வெற்றி அடைந்தது பெருமை அளிக்கிறது. முதல் முயற்சியிலேயே புவி சுற்றுப்பாதைக்கு செல்வது, வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. விக்ரம் ராக்கெட் 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. வரும் 2030ம் ஆண்டிற்க்குள் எங்கள் நிறுவனம் மூலம் 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் மேலும் பல எலான் மஸ்குகள் உருவாக வாய்ப்புள்ளது, என்றார்.



பிரதமர் மோடி வாழ்த்து

இது குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ஐ ஏவியது. இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமையை எடுத்துக்காட்டுகிறது.
நமது விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது. இந்த வெற்றிகரமான ஏவுதலுக்காக, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும்.
அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைப் பின்தொடருமாறும், #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



போனில் வாழ்த்து

விக்ரம் 1 ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஸ்கை ரூட் விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர்களது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். விஞ்ஞானி குழுவினர் நேரில் வந்து சந்திக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' தயாரித்த 'விக்ரம்-1' ராக்கெட் விண்ணில் செலுத்தியது மாபெரும் சாதனை. இந்த ராக்கெட் மூலம் நான் அனுப்பிய வந்தேமாதரம் செய்தி விண்வெளிக்கு சென்றதில் மகிழ்ச்சி. பெருமைமிகு தருணத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



பிரதமர் மோடியையே சாரும்

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம்; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வாய்ப்பு வழங்கியதன் வாயிலாக இந்த ஏவுதல் சாத்தியம் ஆகி இருக்கிறது. இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்; ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ஏவுதலை நிகழ்த்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை பெற்ற ஸ்கை ரூட் நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பெருமை பிரதமர் மோடியை சாரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்காவிட்டால், நாம் இன்று இந்த நிகழ்வை கண்டிருக்க முடியாது. இன்று பிரதமர் மோடியின் முடிவு சரியானது என்று நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் வெறும் ஐந்து ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரத்திலும், விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையிலும் ஒரு மிகப்பெரிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் கணிசமான வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் அது மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டம் வெற்றி இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் தனியார் விண்வெளித்துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை உலக அளவில் சாதனையாக, விண்வெளி துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக அமையும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

அரசு பஸ் இயக்கத்தில் நஷ்டம்

இப்படி தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் விண்ணில் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னும் அரசு தரப்பு பஸ் போக்குவரத்தை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் தலையில் வரி பாரத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறது. தனியார் முதலீடு இல்லாத காலத்தில் அரசு பஸ் போக்குவரத்தை நடத்த ஆரம்பித்தனர்.
இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. நாட்டு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு முதல் மின்சாரம் தயாரிப்பது, ராக்கெட் ஏவுவது என அனைத்திலும் தனியார் முன்னிற்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் அரசு இன்னும் பஸ் போக்குவரத்தை நடத்தி, அதில் நஷ்டம் காண்பது தேவைதானா?
அரசு செய்யும் எந்த ஒரு தொழிலும் லஞ்சம், ஊழல் முறைகேடு, திறனற்ற நிர்வாகத்தால் நஷ்டம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. மொபைல் போன் தொழில் துறையை கண்காணிக்கும் TRAI அமைப்பு போல, அரசு கண்காணிப்பு வேலையை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, பஸ் போக்குவரத்து போன்ற தொழில்களை செய்யக்கூடாது.



தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

விக்ரம்1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us