மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்
மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்
ADDED : ஜூன் 11, 2024 10:39 PM
விஜய நகர் : ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த வாலிபரை, அங்கிருந்த மெட்ரோ ஊழியர்காப்பாற்றினார்.
வழக்கம் போல், நேற்று பெங்களூரு ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலுக்காக பயணியர் காத்திருந்தனர். ரயில் வரும் போது திடீரென ஒருவர், ரயில் தண்டவாளத்தில் குதித்தார்.
இதை பார்த்த ஒரு மெட்ரோ ஊழியர், 'எமர்ஜென்சி டிரிப் சிஸ்டம்' பட்டனை அழுத்தி ரயிலை நிறுத்தினார். அந்நபரை மீட்ட ஊழியர்கள், பயணியர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக விஜயநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து அவரிடம் விசாரித்தனர்.
தற்கொலைக்கு முயற்சித்தவர், பசவேஸ்வர நகரில் வசிக்கும் சாகர், 25, என்பது தெரியவந்தது.
மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.
நேற்று காலை வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல், தனது மொபைல் போனையும் வீட்டில் வைத்து விட்டு, ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவத்தால், அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, மீண்டும் சீரானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.