ADDED : செப் 05, 2024 12:19 AM

போர்பந்தர்: குஜராத் அருகே கடற்பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன; மாயமான வீரரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அரபிக்கடல் பகுதியில், 45 கி.மீ., தொலைவில் நம் நாட்டு தேசியக்கொடியுடன் கூடிய மோட்டார் டேங்கர் கப்பலில் காயமடைந்த ஒருவர் உதவி கோரினார்.
அவரை மீட்க, நான்கு வீரர்களுடன் இந்திய கடலோர காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் கடந்த 2ம் தேதி இரவு அனுப்பப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரின் பாகங்களை கண்டறிந்ததுடன், காயங்களுடன் ஒரு வீரரை மீட்டனர்.
இந்நிலையில், மாயமான மற்ற மூன்று வீரர்களையும், நான்கு கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் வாயிலாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், இரண்டு வீரர்களின் உடல்களை, மீட்புக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு மீட்டனர்.
அவர்கள் அந்த ஹெலிகாப்டரின் பைலட் விபின் பாபு மற்றும் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் குழுவைச் சேர்ந்த டைவர் கரண் சிங் என்பது தெரியவந்தது. மற்றொரு பைலட் ராகேஷ் ரானாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.