மனித உடலுறுப்புகள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கைது
மனித உடலுறுப்புகள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கைது
UPDATED : ஜூன் 02, 2024 04:20 AM
ADDED : ஜூன் 02, 2024 01:37 AM

கொச்சி,கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக மனித உடல் உறுப்புகள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரை கேரள போலீசார் நேற்று கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த மாநில போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ளவர்களிடமும் இருந்து உடல் உறுப்புகள் கடத்தப்பட்டது உறுதியானது. இதற்கு லட்சக்கணக்கான பணம் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கொச்சி போலீசார், சபித் நாசர் என்பவரை சமீபத்தில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட பல்லம்கொண்ட ராம் பிரசாத் என்ற பிரதாபன், 41, என்பவர், தெலுங்கானாவின் ஹைதராபாதில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தெலுங்கானா விரைந்த கொச்சி தனிப்படை போலீசார், ஹைதராபாதில் பிரதாபனை நேற்று கைது செய்தனர்.
ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், அங்குள்ள சிலரை ஏமாற்றி சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்துள்ளவர்களை குறிவைத்து இந்த கடத்தல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து மேற்காசிய நாடான ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவர் மட்டுமின்றி இந்த விவகாரத்தில், நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்ட சஜித் ஷ்யாம் என்பவரையும் கேரள போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.