புதுச்சேரி சட்டசபையில் ரூ. 12,700 கோடி பட்ஜெட் தாக்கல் மீண்டும் இலவச அரிசி திட்டம் துவக்கம்
புதுச்சேரி சட்டசபையில் ரூ. 12,700 கோடி பட்ஜெட் தாக்கல் மீண்டும் இலவச அரிசி திட்டம் துவக்கம்
ADDED : ஆக 02, 2024 08:19 PM

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.
புதுச்சேரி 15வது சட்டசபையின் 5வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி துவங்கியது. நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று 2024-25ம் ஆண்டுக்கு 12,700 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:
நடப்பு நிதியாண்டு முதல் புதுச்சேரியில் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்கப்பட உள்ளது. பொது சேவை மையம் மூலம் ரேஷன் கார்டுகளின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் அளிக்கப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை, வழங்கப்படும்.
பிராந்திய அளவில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையே தலா ரூ. 20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
துவக்க பள்ளிகளில் முன் மழலையர் பராமரிப்பு கல்வி வள மையம் அமைக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் 2 நீட் பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் அமைக்கப்படும்.
மீனவர்களுக்கான, மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.6,500ஐ ரூ.8,000 ஆகவும், மழைக்கால நிவாரணம் ரூ.3,000ஐ ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஆதிதிராவிட, பழங்குடியின வீரர்களின் முழு செலவை அரசு ஏற்கும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ப்லவேறு அறிவிப்புகளை முதல்வர் வௌியிட்டார்.
சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.