பெங்களூரில் சனி, ஞாயிறுகளில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு
பெங்களூரில் சனி, ஞாயிறுகளில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஏப் 23, 2024 06:17 AM
பெங்களூரு : பெங்களூரில் வார நாட்களை விட, சனி, ஞாயிற்று கிழமைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக, போக்குவரத்து போலீசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அதிகமாக பயணிக்கின்றனர்.
இந்நேரத்தில் நகரின் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனாலும் விபத்துகள் குறைவாக நடக்கின்றன. இதுவே வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் துறை குறிப்பிட்டுள்ளதாவது:
வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் பெங்களூரில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு பெங்களூரில் நடந்த விபத்துகளில் 32 சதவீதம், அதாவது 883 விபத்துகள், சனி, ஞாயிற்று கிழமைகளில் நடந்துள்ளன.
இதுவே, 2022 உடன் ஒப்பிடும் போது, சனிக் கிழமைகளில் 103 முதல் 133 பேரும்; ஞாயிற்று கிழமைகளில் 115 முதல் 152 பேரும் விபத்தில் இறந்துள்ளனர். இது, 30 சதவீதம் அதிகமாகும். ஆனால் வார நாட்களில் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் பெரும்பாலும் கனகபுரா, பல்லாரி சாலைகளில் அதிகரிக்கிறது. வார இறுதி நாட்களில் நகர மக்கள் பலர் இச்சாலை வழியாக செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் சாலை விதிகளை மதிக்காமல் வேகமாக பயணிக்கின்றனர்.
காரில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும் செல்வதே உயிரிழப்புகளுக்கு காரணம். இந்த விபத்துகள் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணிக்குள் நடக்கின்றன. கடந்தாண்டு அதிகாலை 3:00 மணி முதல் 6:00 மணிக்குள் விபத்துகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

