ADDED : ஜூன் 21, 2024 02:15 AM
ரோஸ் அவென்யூ:ஹரியானாவில் இருந்து டில்லிக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு 'இண்டியா' கூட்டணி ஆதரவு வேண்டுமென, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய தலைநகரில் தண்ணீர் நெருக்கடியின் பின்னணியில் பா.ஜ., இருக்கிறது. நாடகத்தையும் போராட்டங்களையும் அவர்கள் நடத்துகிறார்கள். உண்மையிலேயே டில்லிக்கு தண்ணீர் பெற விரும்பினால், ஹரியானா பவனுக்கு வெளியே அவர்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
பா.ஜ., ஆளும் ஹரியானாவிடம் இருந்து டில்லியின் தண்ணீரைப் பெறுவதற்காக நாளை (இன்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி தொடங்குவார்.
இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

