ADDED : செப் 01, 2024 11:54 PM

தங்கவயல்: தங்கவயலில் படையெடுக்கும் பாம்புகளால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கவயலில் பூங்காக்களில் மட்டுமே தஞ்சம் அடைந்திருந்த விஷ ஜந்துக்கள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. அழையா விருந்தாளியாக, வீட்டுக்குள் புகுந்து அலற வைக்கின்றன. தற்போது மழை பெய்து செடி, கொடிகள் பசுமையாக வளர்ந்து காணப்படுகின்றன. நடமாட்டமே இல்லாமல் பதுங்கி இருந்த பாம்புகள், வெளியே வர ஆரம்பித்து உள்ளன.
உரிகம் சிவராஜ் நகரில் ஒரு வாரத்தில் நான்கு பாம்புகள் பலரின் பார்வையில் தென்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன், சங்கர் என்பவர் வீட்டில் படம் எடுத்து நின்ற நாகப்பாம்பை பார்த்த அந்த வீட்டின் பெண், பயந்து வெளியே வந்து மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அப்பகுதியின் இளைஞர்கள் வீட்டில் இருந்த பாம்பை பிடித்து, வெளியேற்றினர்.
நேற்று பிற்பகல் 2:40 மணிக்கு, அதே பகுதியில் செந்தில் என்பவர் வீட்டில், 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. அதை, அசத்துல்லா என்பவர் பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டு வந்தார்.
தங்கவயலில் பல பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் காணப்படுவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பை பிடித்து வந்த வாலிபர். இடம்: சிவராஜ்நகர், தங்கவயல்.