ADDED : ஏப் 19, 2024 06:37 AM

பெங்களூரு: 'கடந்த ஐந்து ஆண்டுகளில், பெங்களூரில் போக்குவரத்து விதிமீறிய 123 வாகன ஓட்டிகளிடம், தலா ஒரு லட்சம் ரூபாயும், 2,858 வாகனங்களிடம் 50,000 ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூலிக்க வேண்டி உள்ளது' என போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது:
பெங்களூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக, இரு சக்கர வாகனங்கள், கார்கள், பள்ளி பஸ்கள் உட்பட பல வாகனங்கள் மீது 3 லட்சத்து 71 ஆயிரத்து 294 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில், போக்குவரத்து விதிகள் மீறியதாக 123 வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; 2,858 வாகன ஓட்டிகளுக்கு 50,000 ரூபாய்க்கு மேலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளன. 475 முறை போக்குவரத்து விதிமீறிய இரு சக்கர வாகன ஓட்டிக்கு 2.91 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 19 கோடியே 54 லட்சத்து 16 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டி உள்ளது.
விதி மீறியவர்களின் வீடுகளுக்கு போலீசார் சென்று, அபராத தொகையை, வசூலித்து வருகின்றனர். அப்போதும் அபராதம் கட்டவில்லை என்றால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
இதில், பானஸ்வாடி போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 861; பனசங்கரி புலிகேசி நகர், மாகடி ரோடு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தலா 13,439 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.

