ஜப்பானின் 'மியாவாகி' வனம் மைசூரு மாநகராட்சி திட்டம்
ஜப்பானின் 'மியாவாகி' வனம் மைசூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூலை 27, 2024 11:14 PM
மைசூரு: ஜப்பான் போன்று, பூங்காக்களில் அடர்ந்த வனம் உருவாக்கி, சுற்றுச்சூழலை பசுமையாக்க மைசூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 30 பூங்காக்களில், 'மியாவாகி' போன்று வனம் உருவாக்க ஏற்பாடு செய்கிறது.
இது குறித்து, மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் கோடை காலத்தில், வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. நகரை பசுமையாக்குவதன் மூலம், வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த, மைசூரு மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
ஜப்பானில் குறைந்த இடத்தில், அடர்த்தியான வனம் உருவாக்கும், 'மியாமாகி' திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதன்படி சிறிய இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்க்கலாம்.
இந்த திட்டத்தை மைசூரில் செயல்படுத்த தயாராகிறோம். முதற்கட்டமாக 30 பூங்காக்களில் வனப்பகுதியை உருவாக்குவோம். அதன்பின் மற்ற பூங்காக்களிலும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
மைசூரின் தட்டஹள்ளி, விஜயநகர் இரண்டாவது ஸ்டேஜ், ஹெப்பால், ராஜிவ் நகர், ஜெ.பி.நகர், கனகதாசநகர், சாதகள்ளி உட்பட 30 பூங்காக்களில் 40,000 மரக்கன்றுகள் நடப்படும்.
வில்வம், புங்கை, மா, பலா, ஆலமரம், அரளி, நெல்லி, நாவல், வேப்பிலை, சீதாப்பழம், கொய்யா என, பலவிதமான மரக்கன்றுகள் நடப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, ஜப்பானின், 'டொயோட்டோ கிர்லோஸ்கர்' நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஒரு ஏக்கர் இடத்தில், 20,000 மரக்கன்றுகள் நடலாம்.
மைசூரில் உள்ள சிறு, சிறு பூங்காக்களில் நடைபாதைக்கு இடம் விட்டு விட்டு, மற்ற இடங்களில் பூச்செடிகள், பழ மரங்கள் வளர்ப்போம்.
செடிகள், மரக்கன்றுகள் கொண்டு வருவது முதல், அவற்றை நட்டு பராமரிப்பது வரை நிறுவனத்தினரே, பார்த்து கொள்வர். மூன்று ஆண்டுகள் வரை, நிறுவனத்தினர் பொறுப்பேற்பர்.
குறுகிய காலத்தில் அடர்த்தியான வனம் உருவாக்க, மியாவாகி நடைமுறை உதவியாக இருக்கும். ஆங்காங்கே இத்தகைய வனங்கள் உருவானால், மைசூரு நகர் பசுமையாக மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.