ஜார்க்கண்ட்: போலீஸ் வேலை தேர்வுக்கு சென்றவர்களி்ல் 11 பேர் பலி
ஜார்க்கண்ட்: போலீஸ் வேலை தேர்வுக்கு சென்றவர்களி்ல் 11 பேர் பலி
UPDATED : செப் 02, 2024 10:54 AM
ADDED : செப் 02, 2024 03:08 AM

ராஞ்சி: ஜார்க்கண்டில் போலீஸ் வேலைக்கான தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 10 கி.மீ ஓட்டத்தின்போது, சிலர் மயங்கி விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் வேலைக்கு சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 772 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 21,582 பெண்கள் உட்ட 78,023 பேர் தகுதி பெற்றனர்.
இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் ஏழு இடங்களில் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆக., 22-ல் துவங்கிய ஆட்தேர்வு நடைமுறை செப்., 03 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆட் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் வைக்கப்பட்டது. கடும் வெயிலில் ஓட வைக்கப்பட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் வரையில் எதிர்பாரத விதமாக பலியாயினர். இவர்களின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதே நேரத்தில் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சிலர் தங்கள் செயல்திறனை அதிகரிக்க வீரியமிக்க மருந்துகள் அல்லது ஊக்க மருந்துகள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும், இத்தகைய மருந்துகளால் மூச்சுத்திணறல் அல்லது இதயநோய்க்கு வழிவகுத்திருக்கலாம் என்றும், அதிக வெப்பம் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது உள்ளிட்ட சம்பவங்களும் மரணம் ஏற்பட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசு போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்காக வைக்கப்படும் உடற்தகுதி தேர்வை அதிகாலை 4.30 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஹேமந்த் சோரன் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் பிடிவாதத்தால், கலால் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு செயல்முறை இப்போது 'மரண பந்தயமாக' மாறியுள்ளது. இந்த 'மரண பந்தயத்தில்', மாநிலத்தின் 11 வேலையில்லாத இளைஞர்கள் அகால மரணமடைந்துள்ளனர் எனவும், ஆட்சேர்ப்பு மையங்களில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்றும் மாநில பா.ஜ., தலைவர் பாபுலால் மராண்டி எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
நான்கரை ஆண்டுகளாக இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருந்த போதிலும் ஹேமந்த் திருப்தியடையவில்லை, இப்போது அவர் இளைஞர்களின் உயிரைப் பறிப்பதில் நரகமாக இருக்கிறார்' என்று பா.ஜ., தலைவர் கூறினார்.
இறந்த இளைஞர்களை சார்ந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைகளை உடனடியாக வழங்கவும், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் மாராண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.