டில்லியில் காங்., தலைவர்களுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஆலோசனை
டில்லியில் காங்., தலைவர்களுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஆலோசனை
ADDED : செப் 04, 2024 03:54 AM
சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர்களை டில்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மொத்தம் 81 தொகுதிகளை உடைய ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இப்போதே அரசியல் களத்தில் திருப்பங்கள் அரங்கேறத் துவங்கி விட்டன.
அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மிக முக்கியத் தலைவராக இருந்தவருமான சம்பாய் சோரன், கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் ஐக்கியமானார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் ஹேமந்த் சோரன் கூறுகையில்,''இந்த சந்திப்புக்காக நீண்ட நாட்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அது, தற்போது நடந்துள்ளது. இருப்பினும், இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்,'' என்றார்.
'சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததா?' என, நிருபர்கள் கேட்டதற்கு, ''அது இல்லாமலா? சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சு துவங்கியுள்ளது. எங்கள் கூட்டணி, தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும்,'' என்றார்.
இந்த சந்திப்பின்போது, சோரனின் மனைவி கல்பனா, காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்தனர்.
- நமது டில்லி நிருபர் -