வங்கதேச பிரதமர் கதி வரும்; கவர்னருக்கு காங்., தலைவர் மிரட்டல்
வங்கதேச பிரதமர் கதி வரும்; கவர்னருக்கு காங்., தலைவர் மிரட்டல்
ADDED : ஆக 20, 2024 06:19 AM

பெங்களூரு: 'கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் உங்களுக்கு வரும்' என காங்., தலைவர் இவான் டிசோசா தெரிவித்தார்.
'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி அளித்தார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை வாபஸ் பெற, ஆளும் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேச கதிதான்
இந்நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா கூறியதாவது: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் உங்களுக்கு வரும். அடுத்ததாக கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
இந்தியாவை, பாகிஸ்தானாகவும், வங்கதேசமாகவும் மாற்ற நினைக்கு காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, மாநிலத்தில் ஆளும் கட்சி தலைவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

