கர்னல் மன்ப்ரீத் சிங் உட்பட 4 பேருக்கு கீர்த்தி சக்ரா விருது
கர்னல் மன்ப்ரீத் சிங் உட்பட 4 பேருக்கு கீர்த்தி சக்ரா விருது
UPDATED : ஆக 15, 2024 04:42 AM
ADDED : ஆக 15, 2024 02:56 AM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது வீரமரணம் அடைந்த கர்னல் மன்ப்ரீத் சிங்குக்கு மரணத்துக்கு பிந்தைய கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் வீரதீர செயலுக்கான கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது. இன்று நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, 103 பேருக்கு வீர தீரச் செயல் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார்.
அதன்படி, ஜம்மு - காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில், பயங்கரவாதிகளுடன் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த கர்னல் மன்ப்ரீத் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் மரணத்துக்கு பிந்தைய கீர்த்தி சக்ரா விருது ராணுவ வீரர் ரவிக்குமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேஜர் மல்லா ராமகோபால் நாயுடு, ஜம்மு - காஷ்மீர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஹிமாயூன் முசாமில் பட் ஆகியோரும் கீர்த்தி சக்ரா விருது பெறுகின்றனர்.
இதுதவிர வீரதீரச் செயலுக்கான சவுர்ய சக்ரா விருது 18 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் நான்கு பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 63 பேருக்கு சேனா பதக்கமும், 11 பேருக்கு நவ் சேனா பதக்கமும், ஆறு பேருக்கு வாயு சேனா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.