கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
ADDED : மே 04, 2024 12:59 AM
புதுடில்லி,
'அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''கெஜ்ரிவாலுக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லை. வெறும் யூகங்கள் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என, வாதிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத் துறையினர், கெஜ்ரிவாலுக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதாக கூறினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. தற்போதைய நிலையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'இது தொடர்பாக அடுத்த விசாரணையில் விவாதிக்கலாம்' எனக் கூறி, விசாரணையை வரும் 7ம் தேதி ஒத்தி வைத்தனர்.