ADDED : மே 11, 2024 09:24 PM

புதுடில்லி:“மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்று ஆட்சியை பா.ஜ., தக்கவைத்துக் கொள்ளும் என்பதை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே ஒப்புக்கொண்டுள்ளார்,” பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறினார்.
டில்லி நிருபர்களிடம் சுதன்ஷு திரிவேதி நேற்று கூறியதாவது:
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசுகிறார். ஆனால், அந்தக் கட்சியில் அவரது சகாக்கள் யாரையும் நம்ப முடியாது.
பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், குமார் விஸ்வாஸ், கிரண் பேடி உட்பட பலரைத் தூக்கி எறிந்து, கொள்கைகளை உதறியவர் கெஜ்ரிவால்.
மது குடிப்போர் சில நேரத்தில் உண்மையை வெளிப்படுத்துவது போல, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு 75 வயதை எட்டிய பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அடுத்த பிரதமராக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.