மீனவர்களுக்கு விழிப்புணர்வு கேரள அரசின் புதிய திட்டம்
மீனவர்களுக்கு விழிப்புணர்வு கேரள அரசின் புதிய திட்டம்
ADDED : ஜூன் 26, 2024 01:18 AM
திருவனந்தபுரம், கடலுக்குள் செல்லும்போதும், திரும்பும்போதும் அசம்பாவிதங்களை தவிர்க்க, 'லைப்ஜாக்கெட்' எனப்படும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிவது தொடர்பாக மீனவர்களுக்கு புதிய விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
மிக நீண்ட கடற்கரையை கொண்டது கேரளா. இங்குள்ள முதலபொழி துறைமுகம் பகுதியில், வாமனபுரம் நதி மற்றும் கடிநம்குளம் ஏரி ஆகியவை, அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த பகுதியில் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அதிகளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
மீனவர்கள் பாதுகாப்பு குறித்து சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மாநில மீன்வளத் துறை அமைச்சர் சாஜி செரியன் கூறியுள்ளதாவது:
மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். ஆனால், அவற்றை மீனவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மீனவர்கள் பாதுகாப்புக்காக பாதுகாப்பு ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு மிதவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய இயக்கத்தை துவங்க உள்ளோம்.
இதற்காக, பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்த டால்பின் இடம்பெறும் படக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மீனவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.