கோலாரில் நிலவும் கோஷ்டிப்பூசல்: ம.ஜ.த., வேட்பாளர் பரிதவிப்பு
கோலாரில் நிலவும் கோஷ்டிப்பூசல்: ம.ஜ.த., வேட்பாளர் பரிதவிப்பு
ADDED : ஏப் 10, 2024 05:32 AM

கோலார் தொகுதியில் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கோஷ்டி பூசலால், ம.ஜ.த.,வின் மல்லேஸ் பாபுவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் ம.ஜ.த., இணைந்து, கோலார் - தனி லோக்சபா தொகுதியை பெற்றுள்ளது. சிட்டிங் எம்.பி.,யான முனிசாமி, ம.ஜ.த., தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
கோலார் லோக்சபா தொகுதியின் தேர்தல் பொறுப்பு தம்மிடமே இருக்க வேண்டுமென, கவனமாக செயல்பட்டு வருகிறார்.
தங்கவயல் பா.ஜ.,வில் மூன்று கோஷ்டிகள் உள்ளன. இவர்களை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில தலைமைக்கு உள்ளது. மூன்று கோஷ்டிகளுமே, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி என்று, ஒன்றுபோல் முழங்குகின்றனர்.
தொகுதியின் ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ் பாபு, பா.ஜ.,வின் பக்கபலத்தை நம்பி, பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., 7,09,165 ஓட்டுகள் பெற்றது; காங்கிரஸ் 4,99,144 ஓட்டுகள் பெற்றது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோலார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் 5,80,276 ஓட்டுகள் பெற்றது. ம.ஜ.த., 4,71,509 ஓட்டுகளும்; பா.ஜ., 1,94,370 ஓட்டுகளும் பெற்றிருந்தன. இந்த கூட்டணிக் கட்சிகள், மொத்தம் 6,65,879 ஓட்டுகள் பெற்றுள்ளன.
இதன்படி பார்த்தால் காங்கிரசை விட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 85,603 ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது.
எனவே லோக்சபா தேர்தலில், கோலார் தொகுதி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாகவே இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
சட்டசபை தேர்தலுக்குப் பின், தங்கவயலில் மட்டும் ம.ஜ.த., பலம் இழந்துள்ளது.
இக்கட்சியில் உள்ள இரு கோஷ்டியினரையும் வேட்பாளர் மல்லேஸ்பாபு நேரில் வந்து அணுகவில்லையென வருத்தத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு தீயாய் வேலை செய்ய வேண்டியவர்கள், ஆமையாய் நகர்வதால் ம.ஜ.த., வேட்பாளர் பரிதவித்து வருகிறார்.
- நமது நிருபர் -

