ரோஹிணி ஆச்சார்யாவை எதிர்த்து 'லாலு பிரசாத் யாதவ்' போட்டி
ரோஹிணி ஆச்சார்யாவை எதிர்த்து 'லாலு பிரசாத் யாதவ்' போட்டி
UPDATED : மே 03, 2024 01:35 AM
ADDED : மே 03, 2024 01:34 AM

பாட்னா : தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அவரது பெயர் கொண்ட பலர் போட்டியிட்டது போன்ற ஒரு சம்பவம், பீஹாரிலும் அரங்கேறியுள்ளது.
பீஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்குள்ள சரண் லோக்சபா தொகுதிக்கு, மே 20ல் தேர்தல் நடக்க உள்ளது.
இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து, சரண் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான லாலு பிரசாத் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர், ராஷ்ட்ரீய ஜனசம்பாவனா கட்சி என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன், 2017 மற்றும் 2022 ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களில் இவர் போட்டியிட்டுள்ளார். சரண் லோக்சபா தொகுதியிலும் பலமுறை போட்டியிட்டு உள்ளார்.
''லாலு பிரசாத் யாதவ் வென்றுள்ள இந்தத் தொகுதியில் அவருடைய மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
''தற்போது அவர்களுடைய மகளை எதிர்த்து போட்டியிடுகிறேன். இந்த முறை வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, விவசாயி லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
விளம்பரத்துக்காகவும், ஓட்டுகளை பிரிப்பதற்காகவும் அவர் போட்டியிடுவதாக, ரோஹிணி ஆச்சார்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.