ADDED : ஜூலை 03, 2024 05:22 AM
துமகூரு : மது குடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியதால், சுவற்றில் தலையை மோதச்செய்து தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துமகூரு மாவட்டம், பாவகடா டவுனில் வசித்தவர் மாரக்கா, 45. இவரது மகன் ராகேஷ், 23. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, குடிபோதையில் மாரக்காவிடம், ராகேஷ் தகராறில் ஈடுபட்டார். 'மது குடிக்க வேண்டாம். ஒழுங்காக வேலைக்குச் செல்' என, மாரக்கா கூறினார்.
கோபமடைந்த ராகேஷ், மாரக்காவின் தலையை பிடித்து சுவற்றில் வேகமாக மோதச் செய்தார். படுகாயம் அடைந்த மாரக்கா பரிதாபமாக இறந்தார். ராகேஷ் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மதுகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி யாதவ் கரகேரா நேற்று தீர்ப்பு கூறினார். ராகேஷுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.