ADDED : ஏப் 17, 2024 05:47 AM
பெங்களூரு : பெங்களூரில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், நகர ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து, பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், விரைவில் 'சுற்றுலா ஆட்டோ' திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
நாட்டின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருக்கு, நாள் தோறும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து சுற்றுலா செல்ல, பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது.
இதை கருத்தில் கொண்டும், நகரில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக குறைந்த பட்ஜெட்டில், 'சுற்றுலா ஆட்டோ' திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளனர்.
இது தொடர்பாக, ஆதர்ஷ் ஆட்டோ சங்க தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:
இத்திட்டத்தை முன்னரே செயல்படுத்த முயற்சித்தோம். ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 'சுற்றுலா ஆட்டோ' திட்டத்தை பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் நகருக்கு புதிதாக வருவோருக்கு, வசதியாக இருக்கும்.
நமது கலாசாரம், சுற்றுலா தலங்கள் குறித்து ஆட்டோக்களில் விளக்கப்படும். இதனால் சுற்றுலா ஆட்டோவை, சுற்றுலா பயணியர் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
இந்த ஆட்டோக்களில் குடிநீர் பாட்டில், நாளிதழ், இதழ்கள், பெங்களூரு வழித்தட வரைபடம் இருக்கும். முதல்கட்டமாக 50 ஆட்டோக்களில் அறிமுகப்படுத்த உள்ளோம். உள்ளூர் வழிகாட்டிகள், குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு விதான் சவுதா, ராஜ்பவன், பெங்களூரு அரண்மனை, கப்பன் பூங்காவை சுற்றி காண்பிப்பர்.
ஆனால், ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதலாக பல இடங்களை, கூடுதல் கட்டணத்துடன் சுற்றிக் காண்பிப்பர். சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கான கட்டணங்கள் விரைவில் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

