UPDATED : ஏப் 09, 2024 11:20 PM
ADDED : ஏப் 09, 2024 11:16 PM

மும்பை,: மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக சுமுகமாக முடிந்தது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆளும் கூட்டணி ஒரு அணியாகவும், சிவசேனா உத்தவ் பிரிவு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு ஆகியவை மற்றொரு அணியாகவும் லோக்சபா தேர்லை சந்திக்கின்றன.
இழுபறி
ஆளுங்கட்சி கூட்டணி, மகாயுதி எனப்படும் மெகா கூட்டணி என்ற பெயரிலும், எதிர்க்கட்சி கூட்டணி மஹா விகாஸ் என்ற பெயரிலும் போட்டியிடுகின்றன.
மஹாராஷ்டிராவில், 48 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 19 முதல், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேச்சு நடந்து வந்தது.
ஆனாலும், சாங்க்லி, பிவாண்டி ஆகிய தொகுதிகளையும், மும்பையில் உள்ள ஆறு தொகுதிகளையும் மூன்று கட்சிகளும் கோரி வந்தன.
இந்த தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் மூன்று கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மூன்று கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர். இதில் நேற்று உடன்பாடு எட்டப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.
மும்பையில் உள்ள உத்தவ் தரப்பு சிவசேனா கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உத்தவ் தாக்கரே, சரத் பவார், மஹாராஷ்டிரா மாநில காங்., தலைவர் நானா படோல் ஆகியோர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இதன்படி, உத்தவ் தாக்கரே கட்சி, 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சரத் பவார் கட்சி, 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
உடன்பாடு
இழுபறி நீடித்து வந்த சாங்க்லி மற்றும் பிவாண்டி தொகுதிகளை முறையே, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகளுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது.
இது குறித்து நானா படோல் கூறுகையில், ''பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம்,'' என்றார்.
அதேநேரத்தில் ஆளும் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே இன்னும் தொகுதி பங்கீடு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.

