விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசு மீது கர்நாடகா அமைச்சர்கள் குற்றச்சாட்டு
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசு மீது கர்நாடகா அமைச்சர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 19, 2024 05:42 AM
பெங்களூரு : 'மத்திய அரசு அமலாக்கத்துறையை, தவறாக பயன்படுத்தி, மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கிறது. அரசின் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக சிக்க வைக்க முயற்சி நடக்கிறது,'' என காங்கிரஸ் அமைச்சர்கள் குற்றம்சாட்டினார்.
குறுக்கு வழிகள்
பெங்களூரின், விதான்சவுதாவில் அமைச்சர்கள் கிருஷ்ணபைரேகவுடா, ஜார்ஜ், பிரியங்க் கார்கே, தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டி:
மத்திய அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்க, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவீனமாக்கி, கவிழ்க்க முயற்சிக்கிறது.
விசாரணை அமைப்புகள் மூலமாக, எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்துகிறது.
சட்டசபை தேர்தலில், ஆட்சியை இழந்த பா.ஜ., தற்போது குறுக்கு வழிகளை பயன்படுத்தி, ஒரே கட்சி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. வருவான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்கிறது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் கைதானவர்களிடம், அரசின் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறும்படி, நெருக்கடி கொடுக்கிறது. அமலாக்கத்துறை கூறியபடி கேட்டால், உங்களை காப்பாற்றுவோம். இல்லையென்றால் அமலாக்கத்துறை சக்தியை காண்பிக்க வேண்டி வரும் என, மிரட்டுகின்றனர்.
அமலாக்கத்துறையினருக்கு, தவறு செய்தவர்களை தேடும் நோக்கம் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை பலவீனமாக்குவதே, இதன் நோக்கமாகும். பா.ஜ., அரசு இருந்த போது, போவி மேம்பாட்டு ஆணையம், அம்பேத்கர் மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்தது. கொரோனா நேரத்தில் ஊழல் நடந்தது. அப்போது ஏன், அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை; விசாரணை நடத்தவில்லை.
சட்டப்போராட்டம்
சாட்சிகளை மிரட்டி, தங்களுக்கு தேவையானபடி பேச வைக்கும் முயற்சிக்கு, நாங்கள் பயப்படமாட்டோம். அவசியம் ஏற்பட்டால், சட்டப்போராட்டம் நடத்துவோம். வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம்.
காங்கிரஸ் தலைவர்களை இந்த முறைகேட்டில் சிக்க வைத்து, பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் குறிக்கோளாகும். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை, எங்களால் சகிக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.