ADDED : ஜூலை 05, 2024 06:24 AM
பெங்களூரு: பள்ளி, கல்லுாரி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் ஈடுபடுகின்றனர்.
இதனால் கல்வியில் ஆர்வம் குறைகிறது. எனவே ஒன்றாம் வகுப்பு முதல் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு வரை, பள்ளி, கல்லுாரி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அரசின் உத்தரவு, அனைத்து அரசு பள்ளிகள், கல்லுாரிகள், அரசு நிதியுதவி பெறும், பெறாத பள்ளி, கல்லுாரிகளுக்கு பொருந்தும். மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களும் கூட, வகுப்பு நேரத்தில், பள்ளி, கல்லுாரி வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்த கூடாது.
'அரசின் உத்தரவை மீறி, மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரிந்தால், அவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும். இது குறித்து, நோட்டீஸ் பலகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.