ADDED : ஆக 24, 2024 01:48 AM

பெங்களூரு : தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில், நேற்று அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை, கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜ் துவக்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான் - 3' திட்டத்தின் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் மாதிரிகளை பார்வையிட்டார்.
பின், அமைச்சர் போசராஜ் கூறியதாவது:
இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையை உலகிற்கு காட்டும் வகையில், 'சந்திரயான் - 3' நிலவின் தென் துருவத்தில் கால் பாதித்த நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களை, அறிவியல் மற்றும் விண்வெளியில் அதிக ஆர்வம் காட்ட துாண்டியுள்ளது.
இதுவரை 100க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, சந்திராயன்- - 1, 2, 3 மூலம் உலகின் விண்வெளி துறையில் தனக்கென தனி மைல்கற்களை அமைத்துள்ளது. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில், நடமாடும் விண்வெளி ஆய்வுகூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.