'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை அதிகார மையத்துடன் தொடர்பில்லை' பாலியல் சர்ச்சையில் மவுனம் கலைத்த மோகன்லால்
'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை அதிகார மையத்துடன் தொடர்பில்லை' பாலியல் சர்ச்சையில் மவுனம் கலைத்த மோகன்லால்
ADDED : செப் 01, 2024 12:26 AM
திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன்லால், ''என் பொறுப்புகளில் இருந்து ஓடி ஒளியவில்லை; எந்த அதிகார மையக் குழுவுடனும் எனக்கு தொடர்பில்லை,'' என்றார்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் விசாரிக்க, மாநில அரசால் 2017ல், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் மூன்று நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தங்கள் அறிக்கையை 2019ல் அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை ஐந்தாண்டுகளுக்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, கேரள சினிமா மற்றும் அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பிரபல நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குனர்கள் ரஞ்சித், ஸ்ரீகுமார் மேனன் உள்ளிட்டோர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, 'அம்மா' என்றழைக்கப்படும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் சமீபத்தில் ராஜினாமா செய்தார். சங்கத்தின் செயற்குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டது.
எனினும், இந்த விவகாரம் குறித்து நடிகர் மோகன்லால் வாய் திறந்து பேசாதது விமர்சனத்துக்கு உள்ளானது. சர்ச்சையை எதிர்கொள்ள துணிச்சலின்றி மோகன்லால் ஓடி ஒளிவதாக நடிகை பார்வதி சமீபத்தில் விமர்சித்தார்.
இந்நிலையில், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கேரள கிரிக்கெட் லீக் போட்டிகளின் துவக்க விழா, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மோகன்லால் உற்சாகமின்றி காணப்பட்டார்.
மேடையில் ஏறியதும், பார்வையாளர்களை நோக்கி சில நிமிடங்கள் கைகூப்பி மன்னிப்பு கேட்டபடி நின்றார். பின்னர் அவர் பேசியதாவது:
'அம்மா' என்பது தொழிற்சங்கம் அல்ல. அது குடும்பத்தைப் போன்றது. அந்த சங்கம் வேட்டையாடப்படுவது வருத்தம் அளிக்கிறது. மற்ற மொழி திரைத்துறையுடன் ஒப்பிடும் போது மலையாள திரையுலகம் சிறப்பாகவே உள்ளது.
நடிகர், தயாரிப்பாளர் என்ற முறையில், ஹேமா கமிட்டியிடம் என் கருத்துக்களை ஏற்கனவே இரண்டு முறை நேரில் பதிவு செய்துள்ளேன். குழுவின் அவதானிப்புகளை வரவேற்கிறேன்.
சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போலீசின் பணி.
அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளோம். எனக்கான பொறுப்புகளில் இருந்து நான் ஓடி ஒளியவில்லை; அதிகார மையக் குழுவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.