மும்பை லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,250 கோடி மோசடி என புகார்
மும்பை லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,250 கோடி மோசடி என புகார்
ADDED : மார் 12, 2025 01:04 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாட்டின் பிற நகரங்களில் செயல்படும் லீலாவதி மருத்துவமனையை, லீலாவதி கீர்த்திலால் மேத்தா மெடிக்கல் டிரஸ்ட் துவக்கியது. இதன் முன்னாள் அறங்காவலர்கள் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர். தற்போது, மும்பைன் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் அதன் செயல் இயக்குநராக உள்ளார்.
முன்னாள் அறங்காவலர்களிடம் இருந்து மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பை, பிரஷாந்த் கிேஷார் மேத்தா, 55, இப்போது பெற்றுள்ளார். அவர் தலைமையிலான அறங்காவலர்கள், பழைய கணக்கு, வழக்குகளை தோண்டி பார்த்த போது, 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
அதையடுத்து, பாந்த்ரா நீதிமன்ற உத்தரவுபடி, அந்த நகர போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அறங்காவலர்கள் ஏழு பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மீது, பிரஷாந்த் கிேஷார் மேத்தா புகார் அளித்துள்ளார்.
அதில், 'போலியான பில்கள் தயாரித்தும், விழாக்கள் நடத்தியதாக கணக்கு காண்பித்தும், பொருட்கள் வாங்கியதாக கூறியும், 1,250 கோடி ரூபாயை இந்த 17 பேரும் சுருட்டியுள்ளனர்.
'இந்த முறைகேடு, 20 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளதை இப்போது தான் கண்டறிந்தோம். எனவே, இந்த விவகாரம் குறித்து, முந்தைய அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரம்வீர் சிங் கூறும் போது,''மருத்துவமனையின் நிரந்தர அறங்காவலர் அறையிலிருந்து மனித முடி, தலை, மண்டையோடு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அந்த அறையில் மந்திர, தந்திர வேலைகளை செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். போலீசார் தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.