ADDED : ஆக 08, 2024 01:16 AM
புதுடில்லி, உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் வாயிலாக, இந்திய தொழில் நிறுவனங்களில் குறுகிய காலத்துக்கு பணியாற்றும் சீன வல்லுனர்களுக்கான, வணிக விசா நடைமுறை இணையதளம் செயல்பட துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
கடந்த 2020ல் மொபைல் போன் உற்பத்தி துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் அடுத்ததாக, 2021ல் தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளுக்கான துறையிலும் விரிவுபடுத்தப்பட்டது.
தொலைத்தொடர்பு, ஜவுளி, மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள், உணவுப் பொருட்கள், உள்ளிட்ட 14 வகையான துறைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் செயல்படும் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு, பயிற்சி அளிப்பது தவிர, சில இயந்திரங்களை நிறுவுதல் அல்லது பழுதுபார்த்தல் போன்ற பணிகளுக்கு தேவைப்படும் சீன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு, விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக சில உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் புகார் தெரிவித்தன.
இதையடுத்து, அவர்களுக்கான வணிக விசா நடைமுறைகளை எளிதாக்கும் இணையதளம் செயல்படத் துவங்கியுள்ளதாக, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.