வன மேம்பாட்டுக்காக ஒதுக்கிய நிதியில் 'ஐபோன்'கள் வாங்கிய அதிகாரிகள்
வன மேம்பாட்டுக்காக ஒதுக்கிய நிதியில் 'ஐபோன்'கள் வாங்கிய அதிகாரிகள்
ADDED : பிப் 23, 2025 02:17 AM

டேராடூன்: உத்தரகண்டில் வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பல அலங்காரப் பொருட்களை அதிகாரிகள் வாங்கியது, தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
உத்தரகண்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். உத்தரகண்ட் சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தொடரில், 2021 - 22ம் நிதியாண்டிற்கான தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
வனத் துறை, சுகாதார துறை, தொழிலாளர் நல வாரியம் ஆகியவை உரிய அனுமதியின்றி பொது நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளன. 2017 - 2021 வரை, அரசின் அனுமதியின்றி தொழிலாளர் நல வாரியம் 607 கோடி ரூபாயை செலவிட்டுஉள்ளது.
'காம்பா' எனப்படும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை இழப்பீடுக்கான திட்டமிடல் ஆணையத்தில் இருந்து 14 கோடி ரூபாய் நிதி, பிற நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த நிதி, காடு வளர்ப்புக்கும், அதற்கான திட்டமிடலுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.
ஆனால், அலுவலக கட்டடங்களை புதுப்பித்தல், நீதிமன்ற வழக்குகளுக்கு பணம் செலுத்துதல், மடிக்கணினிகள், ஏர் - கூலர்கள், ஐபோன்கள், குளிர்சாதன பெட்டி போன்றவை காம்பாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
அலுவலகத்தை அழகுபடுத்துவதற்கான அலங்காரப் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.