புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லிமென்ட் வளாகம்
புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லிமென்ட் வளாகம்
ADDED : மே 17, 2024 11:20 PM

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால், புதிய எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்க லோக்சபா செயலகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில், பதிவாகும் ஓட்டுகள், அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இவற்றில், தேர்வாகும் எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில், மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும், புதிய எம்.பி.,க்கள் வருகைக்கு முன் இப்பணிகள் முடிவடையாது என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவர்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல், புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சிறப்பு குழுக்களை அமைத்து, அவர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, அவர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் எடுப்பது, புதிய எம்.பி.,க்களின் வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது, புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளன.
இதேபோல், பழைய எம்.பி.,க்கள், அரசு குடியிருப்புகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். எனவே, புதிய எம்.பி.,க்கள் தங்க, மாநில அரசுகளின் இல்லங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

