சீருடைக்கு குறைவான பணம் தருவதா? பி.எம்.டி.சி., தொழிலாளர்கள் அதிருப்தி!
சீருடைக்கு குறைவான பணம் தருவதா? பி.எம்.டி.சி., தொழிலாளர்கள் அதிருப்தி!
ADDED : ஆக 02, 2024 10:13 PM
பெங்களூரு : சீருடைக்காக துணி கொடுப்பதற்கு பதிலாக, குறைவான தொகை கொடுப்பதால், பி.எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பி.எம்.டி.சி., பஸ்களின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்குகளுக்கு சீருடைக்காக துணி வழங்கப்படும். இதை அவர்கள் தைத்துக் கொள்வர். ஆனால், தற்போது துணிக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம், சீருடை வாங்கவும் தைக்கவும் போதுமானதாக இல்லை.
பி.எம்.டி.சி.,யின் ஆண் நடத்துனர், ஓட்டுனர், மெக்கானிக்குகள் இரண்டு ஜோடி சீருடை வாங்க 750 ரூபாயும், தைத்துக் கொள்ள 350 ரூபாயும் வழங்கப்படுகிறது.
தையல் கட்டணம்
ஆனால் ஒரு ஜோடி பேண்ட், சட்டை தைத்துக்கொள்ள, 1,400 முதல் 1,500 ரூபாய் வரை தையல் கட்டணம் ஆகிறது. இரண்டு ஜோடி சீருடைக்கு 3,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மகளிர் நடத்துனர், மெக்கானிக்குகள் இரண்டு சீருடை சேலைகள் வாங்க 1,707 ரூபாயும், ரவிக்கை தைத்துக் கொள்ள 100 ரூபாயும் கொடுக்கின்றனர். தரமான காக்கி நிற சேலையின் விலை, 1,500 முதல், 2,000 ரூபாயாக உள்ளது.
சாதாரண ரவிக்கை தைக்க 300 ரூபாய் கட்டணம். பி.எம்.டி.சி., வழங்கும் குறைந்த தொகையில், சீருடை தைக்க முடியாது என, நடத்துனர், ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
ஒரு ஜோடி சீருடை தைக்க, குறைந்தபட்சம் 1,350 ரூபாய் ஆகும். ரேமண்ட் துணி என்றால், 1,950 ரூபாய் செலவிட வேண்டும். ஆனால் பி.எம்.டி.சி., இரண்டு ஜோடி சீருடைகளுக்கு, வெறும் 1,000 ரூபாய் வழங்குகிறது. இந்த பணத்தில் எப்படி சீருடை தைப்பது?
பி.எம்.டி.சி.,யில் மொத்தம் 13,000 நடத்துனர், ஓட்டுனர்கள் உள்ளனர். 6,000 மகளிர் நடத்துனர், மெக்கானிக்குகள் உள்ளனர். இவர்களுக்கும் சீருடைக்கு தேவையான தொகை வழங்குவதில்லை.
தேவையற்ற விஷயங்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட, பி.எம்.டி.சி.,யிடம் பணம் உள்ளது.
பணம் இல்லையா?
ஆனால் இரவு பகலாக, உயிரை பணயம் வைத்து, தினமும் நுாற்றுக்கணக்கான கி.மீ., பயணம் செய்து பணியாற்றுகின்றனர். இவர்களின் சீருடைக்கு பி.எம்.டி.சி.,யிடம் பணம் இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.