ADDED : மே 22, 2024 06:40 AM
பெங்களூரு : கடைக்காரர்களிடம் லஞ்சம் வசூலித்த போலீஸ்காரர்கள், ஹொய்சாளா வாகனத்தில் தப்பினர். அந்த வாகனத்தை மக்கள் துரத்தினர்.
பெங்களூரில் இரவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஹொய்சாளா வாகனத்தில் போலீசார் ரோந்து வருகின்றனர்.
ஆனால் சில இடங்களில் ஹொய்சாளா வாகனத்தில் வரும் போலீசார், கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் ஒரு இடத்தில், கடைக்காரர்களை மிரட்டி, ரோந்து சென்ற இரு போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கினர்.
இதை, கடைக்கு வந்த சிலர், மொபைல் போன்களில் வீடியோ எடுத்தனர். இதனால் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, ஹொய்சாளா வாகனத்தில் சென்று ஏறினர். ஆனாலும் வீடியோ எடுத்தவர்கள், போலீஸ்காரர்களை விரட்டினர்.
இதையடுத்து ஹொய்சாளா வாகனம் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. அந்த வாகனத்தையும் விரட்டினர். வீடியோ எடுத்தவர்கள் போலீஸ் கள்ளன்... போலீஸ் கள்ளன் என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. சம்பவம் நடந்தது எந்த இடம் என்று தெரியவில்லை.

