'வன்தாரா' வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்தார் பிரதமர் மோடி
'வன்தாரா' வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்தார் பிரதமர் மோடி
ADDED : மார் 05, 2025 05:04 AM

ஜாம்நகர் : குஜராத்தின் ஜாம்நகரில், 'வன்தாரா' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள, 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மைய வளாகத்தில், 'வன்தாரா' என்ற பெயரில் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' மற்றும் 'ரிலையன்ஸ்' அறக்கட்டளையால், 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வனவிலங்கு சரணாலயத்தில், 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட, அழிந்துவரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளும் உள்ளன.
இந்த வனவிலங்கு சரணாலயத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அங்கு விலங்குகளின் மருத்துவ சிகிச்சைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள, எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை பார்வையிட்டார்.
மேலும், விலங்குகளுக்கான அனஸ்தீஷியா, இதய சிகிச்சை, சிறுநீரகவியல், பல் மற்றும் எண்டோஸ்கோபி பிரிவுகளை பார்வையிட்டு டாக்டர்களுடன் கலந்துரையாடினார்.
பின், ஆசிய சிங்கம் மற்றும் சிறுத்தைக் குட்டிகளுடன் பிரதமர் விளையாடினார். இந்த சரணாலயத்தில் சமீபத்தில் பிறந்த வெள்ளை சிங்கக்குட்டிக்கு பிரதமர் பாலுாட்டினார்.
வனப்பகுதிக்கு அருகே நெடுஞ்சாலையில் வாகனம் மோதி படுகாயம் அடைந்த சிறுத்தை, வன்தாரா எடுத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த சிறுத்தைக்கு நடந்த அறுவை சிகிச்சையை பிரதமர் நேரடியாக பார்வையிட்டார்.