பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது : சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார்
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது : சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார்
UPDATED : மே 31, 2024 06:08 AM
ADDED : மே 31, 2024 01:32 AM

பெங்களூரு : பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடகா ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா இன்று (மே.31) ஜெர்மனியிலிருந்து நள்ளிரவு பெங்களூரு வந்திறங்கினார். அவரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு சென்றனர்.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர், சில பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஏப். 26ம் தேதி இரவு, ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டார். அதில் மே.31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்தார்.
ஜெர்மனின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று (மே.31) 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்திறனார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைதுசெய்து சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று (மே.31ம் தேதி) காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.