பில்கேட்சுக்கு தூத்துக்குடி முத்து பிரதமர் மோடி பரிசு வழங்கினார்!
பில்கேட்சுக்கு தூத்துக்குடி முத்து பிரதமர் மோடி பரிசு வழங்கினார்!
UPDATED : மார் 29, 2024 11:08 AM
ADDED : மார் 29, 2024 10:10 AM

புதுடில்லி: உலகப்பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் இன்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நேரடியாக கலந்துரையாடினார். இந்த விவாதத்தில் செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல், பருவ கால மாற்றம், பெண்கள் முன்னேற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர்.
தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்தியா
பில்கேட்ஸ் கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதிலில் இந்தியாவின் பெருமையை எடுத்து கூறினார். பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. கிராமங்கள் வரை தொழில்நுட்பம் சென்று வருகிறது. டிஜிட்டல் முறை இளையோர், பெண்களை கவர்ந்துள்ளது. சாட்ஜிபிடியை பலரும் பயன்படுத்த துவங்கி உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமாக கற்க பெண்கள் தயாராக உள்ளனர். சைக்கிள் கூட ஓட்ட தயங்கிய பெண்கள் இப்போது விமானம் வரை ஓட்டுகின்றனர். தமிழகம், காசியில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகு ஓடத் துவங்கி உள்ளது.
காசி தமிழ்சங்கமம் நிகழ்வில் எனது பேச்சு ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது போல் எனது நமோ ஆப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய ஒற்றுமைக்கு அரும்பாடு பட்டவர் சர்தார்பட்டேல். இவர் 1930ல் நாடு முழுவதும் விஷ காய்ச்சல் பரவியது. அப்போதை பட்டேல் தடுப்பூசி கட்டாயம் என உத்தரவிட்டார். இதன்படி கோவிட் காலத்திலும் நாங்கள் தடுப்பு வழிமுறைகளை சிறப்பாக கையாண்டோம்.
மில்லட் உணவு வகைகள்
வெஜிடேரியன் உணவுகளே சிறந்தது. இதனால் அதனை விரும்பி சாப்பிடுகிறேன். தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. உணவு பதார்த்தங்கள் தயாரிப்பது எளிது. சூப்பர் சக்தி கிடைக்கிறது. நட்சத்திர ஓட்டலில் கூட தானியங்கள் உணவுகளை பட்டியலிட்டு விற்க துவங்கி உள்ளன.
இரவு தாமதாக தூங்க சென்று விரைவில் எழுகிறேன். குறைந்த நேரமே தூக்கம். இருந்தாலும் எனது உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி முத்து
தமிழகத்தின் தூத்துக்குடியில் கடல் பகுதியில் எடுத்த முத்து, மற்றும் டார்ஜீலிங், நீலகிரியில் உருவான டீத்தூளையும் , களிமண்ணால் உருவான மண்குதிரைகள் , பில்கேட்சுக்கு பரிசாக பிரமதர் மோடி வழங்கினார். இதனை கொடுக்கும் போது உள்ளூர் பொருட்களை வாங்குங்கள் என மக்களை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் பெருமை கிட்டும் என்றார்.

