ADDED : மார் 11, 2025 11:07 PM

ஹாசன்; திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால், தாயும், மகனும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஹாசன், சென்னராயபட்டனா தாலுகாவில் உள்ள கபாலி கிராமத்தை சேர்ந்தவர் பரத், 35. இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன், பகுரானஹள்ளி கிராமத்தை சேர்ந்த கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதை பார்த்த பரத்தின் அம்மா ஜெயந்தி, 60, மருமகள் கீதாவிற்கு புத்திமதி கூறி உள்ளார்.
ஆனால், கீதா மாமியாரிடமும் சண்டை போட்டு உள்ளார். ஒரு முறை இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் அடைந்த கீதா, தன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இதன்பின், இரண்டு முறை நடந்த ஊர் பஞ்சாயத்திலும், மனைவி சேர்ந்து வாழ்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், பரத்தும், அவரது தாயும் சோகம் அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாயும், மகனும் வீட்டின் அருகே உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று கரை ஒதுங்கிய உடல்களை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.